கூட்டமைப்பின் ஆதரவுடன் இலங்கை அரசின் வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு நிறைவேறியுள்ளது. வரவு செலவுத் திட்டத்தில் வட மாகாணம் திட்டமிட்ட வகையில் புறந்தள்ளப்பட்டுள்ளதாக அனந்தி சசிதரன் சாடியுள்ளார். மாவீரர் நாள் நிகழ்வுகளில் கட்சிகளுக்கு அனுமதியில்லை என்று மாவீரர் நாள் பணிக்குழு தெரிவித்துள்ளது. ஆயுதக் குழுக்களுடன் எந்தவித தொடர்புகளும் அற்றவர்கள் கூட சிறிலங்கா படையினரால் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை சனாதிபதியிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இரணைதீவில் பல இலட்சம் ரூபா பெறுமதியான மீன்களை சிறிலங்கா கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கனடாவின் முதலாவது பிலிப்பீனோ செனட்டனர் கொலம்பிய பயணத்தின் போது உயிரிழந்துள்ளார். நளினிக்கு 6 மாதம் சிறைவிடுப்பு வழங்குவதற்கு தமிழக அரசு மறுப்புத் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் தலைநகரில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 0 0 இலங்கைச் செய்திகள்: 1. இலங்கை அரசாங்கத்தின் 2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது. வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று பிற்பகல் 5 மணியளவில் நடாத்தப்பட்டது. இதன்போது 151 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்த நிலையில், 58 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர். இதனால் 93 மேலதிக வாக்குகளால் வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு நிறைவேறியது. இந்த வாக்கெடுப்பில் ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்களுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களிததனர். மக்கள் விடுதலை முன்னணி மற்றும் கூட்டு எதிரணி உறுப்பினர்கள் இந்த வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர். மூன்றாவது வாசிப்பு மீது நாளை முதல் குழுநிலை விவாதங்கள் இடம்பெற்று இறுதி வாக்கெடுப்பு டிசெம்பர் மாதம் 9ஆம் நாள் நடைபெறவுள்ளது. 00000000000 2. வட மாகாணத்தை திட்டமிட்ட வகையில் புறந்தள்ளி இல்ஙகை அரசின் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன் தொழில் வாய்ப்பில்லாத இளைஞர்கள் அரசாங்க தொழிலினை மட்டுமே எதிர்ப்பார்க்காமல் தனியார் அல்லது சுய தொழில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மன்னார் பாலத்திற்கு அருகில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கைவிணைப்பொருட்களும் பணை சார்ந்த உற்பத்தி பொருட்களும் உற்பத்தி செய்யும் இடத்தின் திறப்பு விழா நேற்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றியபோதே இதனைத் தெரிவித்துள்ள வட மாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், நல்லாட்சி அரசாங்கம் வரவு செலவு திட்டத்தில் நயவஞ்சகமாக செயற்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளார். 00000000000 3. மாவீரர் நாள் நிகழ்வுகளில் அரசியல் கட்சியாக நுழைந்து கலந்துகொள்வதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று மாவீரர் நாள் பணிக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று மாவீரர் நாள் பணிக்குழு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில், வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற ஏற்பாடாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. இவ்வாறான நிலையில் இவற்றில் அரசியல் கட்சியாக நுழைந்துகொள்ள எவருக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும், சாதாரண மக்களாக எவரும் வரலாம் எனவும், அவர்களின் பாதுகாப்பு உறுப்பினர்கள் கூட ஆயுதங்களுடன் இந்த இடத்துக்குள் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில், ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த மாவீரர்களின் வித்துடல்களும் விதைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் பெற்றோர்கள், உறவினர்களை தனித்தனியாக அழைக்க முடியாத சூழ்நிலை காரணமாக, ஊடகங்கள் ஊடாக அழைப்பு விடுக்கின்றோம் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 00000000000 4. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர். கொழும்பில், சனாதிபதி மாளிகையில் இன்றைய நாள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுப்பட்டபோது, இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பாக கலந்து கொண்ட அந்த அமைப்பின் ஏற்பாட்டாளர் அமலநாயகி தெரிவித்துள்ளார். எமது உறவுகளை தேடி, நாம் அற வழியில் மேற்கொள்ளும் போராட்டங்கள் அரச புலனாய்வு துறையினரால் கண்காணிக்கப்படுவதானது இன்னும் தொடர்கின்றது என்றும், இந்த செயற்பாடானது பாதிக்கப்பட்ட தரப்பினரை மேலும் பாதிப்படைய செய்கின்றது என்றும் இதன்போது அவர்கள் இலங்கை சனாதிபதியிடம் முறையிட்டுள்ளனர். அத்துடன் கைதுகள், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் ஆகியவற்றுக்கு தகுந்த ஆதாரங்கள் காணப்பட்ட போதிலும் விசாரணைகள் தாமதமாவது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுளள் அவர்கள், சிறப்பு விசாரணை குழுக்கள் கடந்த காலத்தில் அமைக்கப்பட்ட போதும், அவர்களது விசாரணை பக்கச்சார்பாக காணப்பட்டமை நீதி தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த 2000ஆம் ஆண்டு தொடக்கம் 2009 வரையான காலப்பகுதியில் 600க்கும் மேற்பட்ட எமது உறவுகள் வீடுகளில் உணவருந்தி கொண்டிருந்த போதும், வயல் மற்றும் தொழில் செய்யும் இடங்களிலும், ஏன் வீதியில் பயணம் செய்யும் போதும் மனைவி பிள்ளைகள் தாய் தகப்பன் நண்பர் உறவினர் முன்னிலையில் வலிந்து இழுத்துச்செல்லப்பட்டனர் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள் ஆயுதக்குழுவுடன் எவ்வித தொடர்புமற்றவர்கள் எனவும், வீட்டில் உணவருந்திக்கொண்டிருந்த போது வெள்ளை வானில் வந்த அதிரடிப்படை என்று இனங்காணப்பட்டோரால் இழுத்துச்செல்லப்பட்ட கணவனை தேடி, அதிரடிப்படை முகாமுக்கு மகனை அழைத்து சென்ற தாய், கணவனுடன் மகனையும் தொலைத்த நிலை, எமது கண்ணீர் வரலாறுகளுக்கு உதாரணமாகும் எனவும் அவர்கள் மைத்திரிபால சிறிசேனவிடம் எடுத்துரைத்துள்ளனர். எனவே எமது உறவுகளின் இன்றைய நிலை தொடர்பான உண்மையானதும் நீதியானதும் விரைவானதுமான விசாரணை மேற்கொள்ளப்பட்டு, எமக்கு தகவலும் நீதியும் வழங்கப்படவேண்டும் எனவும், எமது உறவுகள் எம்முடன் இணைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறத்தியுள்ளனர். மாறாக கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக துணைப்படையுனருடன் இணைந்து சிறிலஙகா அதிரடிப்படையினர், இராணுவத்தினர், புலனாய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட வன்செயல்களுக்குக்கான நீதி இதுவரை கிடைக்காத நிலையில், அண்மையில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் தொடர்பாக நீதி எமக்கு வழங்கப்படுமா என்கின்ற கேள்வி எமக்குள் எழுகின்றது எனவும் அவர்கள் கூறியுள்ளனர். அத்துடன் கடந்த காலத்தில், 1990ஆம் ஆண்டு புனானை மயிலம்கரச்சி என்னும் பகுதியில் 39 பேர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம், சித்தாண்டி முருகன் கோவிலில் அகதிகளாக தஞ்சம் புகுந்து வாழ்ந்து வந்த 89ஆண்கள் இராணுவத்தினரால் கைது செய்ப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம், சத்துருக்கொண்டானில் சிறுவர்கள், பெண்கள், கற்பிணித்தாய்மார், முதியோர், வலதுகுறைந்தோர், ஆண்கள், யுவதிகள் 186 பேர் இராணுவத்தினரால் சுற்றிவழைப்பில் கைதுசெய்யப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம், கிழக்கு பல்கலைக்கழகத்தில் அகதிகளாக இடடம் பெயர்ந்து தஞ்சம் புகுந்திருந்த மக்களை சுற்றி வளைத்து அதில் குறிப்பாக 158 இளம் வயது ஆண்களை வற்புறுத்தலில் கைது செய்து கொண்டு சென்ற சம்பவம் உள்ளிட்டவை முக்கியமாக கருத்தில் எடுக்கப்பட வேண்டியது அவசியம் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இவை சில உதாரணங்களே எனவும், நாங்கள் பலதடவைகள் குரல் கொடுத்திருந்த போதும், எதிர்பார்க்கும் நீதி மற்றும் தங்களால் வழங்கப்பட்ட வாக்குறிதி எனபன இதுவரை காலமும் நிறைவேற்றவில்லை என்பதனை வேதனையுடன் சுட்டிக்காட்டுவதாகவும் அவர்கள் மைத்திரிபால சிறிசேனவிடம் குறிப்பிட்டுள்ளனர். ஆயினும் இனத்துவ ஒருமையை விரும்புவதாக தெரிவிக்கும் தாங்களது நல்லாட்சியில் இனிமேலும் பாகுபாடுகளை நாம் உணராதவாறு, காலதாமதமின்றி எமக்கான நீதி கிடைக்க உதவுவீர்கள் என்று நம்புகின்றோம் என்றும் இன்று இலங்கை சனாதிபதியைச் சந்தித்த காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 00000000000 5. சமகால அரசாங்கத்தின் கீழ் எந்தவொரு இரகசிய முகாமும் இல்லை என்றும், இரகசிய முகாம்களில் எவரும் தடுத்து வைக்கப்பட்டிருக்கவில்லை என்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிடம் இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இலங்கை சனாதிபதி செயலகத்தில் இன்று சனாதிபதியை சந்தித்தபோதே, அவர் இவ்வாறு கூறியதாக சனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்குள்ள பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க தாம் எதிர்பார்ப்பதாகவும், இதற்கமைய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது முறைப்பாடுகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான தகவல்களை சேகரிப்பதற்காக புதிய விண்ணப்பமொன்றை மாவட்ட செயலகங்கள் ஊடாக விநியோகிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் அவற்றை எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் நாளுக்கு முன்னர் சேகரிக்குமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் சுற்றரிக்கை மூலம் அறிவிக்குமாறும் சனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் தகவல்களை, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பணியகம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஆணைக்குழு என்பனவற்றின் ஊடாக மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தவும் சனாதிபதி இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளதாக சனாதிபதி ஊடகப் பிரிவு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 00000000000 6. இரணைதீவு மேற்கு கடல் பகுதியில் மீன் பிடித்துவிட்டுக் கரை திரும்பிய மீனவர் ஒருவரின் பல இலட்சம் ரூபா பெறுமதியான பாரை மீன்களை சிறிலங்கா கடற்படையினர் பள்ளிமுனை கடற்கரையில் வைத்துப் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை மாலை மீன் பிடிப்ப தற்காக சக மீனவர்களுடன் கடலுக்குச் சென்ற மன்னார் பள்ளிமுனையைச் சேர்ந்த மீனவர் ஒருவர், மறுநாள் காலை இரணைதீவு மேற்கு கடற்பகுதியில் உள்ள கடற்படை முகாமுக்குச் சற்றுத் தொலைவில் சுருக்கு வலையைப் பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டார். இதன் போது சுமார் 700 கிலோ பாரை மீன்களைப் பிடித்த அவர், சக மீனவர்களின் உதவியுடன் மீன்களைப் பள்ளிமுனை கடற்கரைக்கு நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் கொண்டு சென்றுள்ளார். இதன்போது பள்ளிமுனை கடற்கரையில் இருந்த கடற்படையினர் குறித்த மீனவரின் படகில் உள்ள மீன்களை கரைக்குக் கொண்டு செல்ல அனுமதிக்காது, குறித்த மீன்கள் டைனமெட் வெடி பொருள் பயன்படுத்தியே பிடிக்கப்பட்டது என்று தமக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனினும் குறித்த மீன்கள் கடற்படை முகாமுக்கு அருகில் வலையைப் பயன்படுத்தியே பிடிக்கப்பட்டது என்று மீனவர்கள் கடற்படையினரிடம் தெரிவித்ததுடன், சம்பவ இடத்துக்கு சென்ற மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளுக்கு முன் மீன்கள் வெட்டிக் காண்பிக்கப்பட்டது. எனினும் கடற்படையினர் குறித்த மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதோடு, மறித்து வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் ரூபா பெறு மதியான சுமார் 700 கிலோ பாரை மீன்களை மன்னார் மாவட்டக் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்த நிலையில், திணைக்கள அதிகாரிகள் குறித்த மீன்களை மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதே வேளை கடற்றொழில் திணைக்களத்தின் அனுமதியுடன்தான் தாங்கள் இந்த வகையில் மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்ற போதும், சிறிலங்கா கடற்படையினர் தமக்குத் தொடர்ச்சியாக கடலிலும், கடற்கரையிலும் பல்வேறு அசௌகரியங்களை ஏற்படுத்துகி்ன்றனர் என்று மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 00000000000 7. பனை அபிவிருத்திச் சபை யாழ்ப்பாண மாவட்டத்தில் இரண்டரை லட்சம் பனம் விதைளை நடுகை செய்யும் பணியை ஆரம்பித்துள்ளது. ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவு ஊடாகவும் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் இந்தப் பனம் விதைகள் நடுகை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக உற்பத்தியாளர்களிடம் இருந்து பெருமளவு பனம் விதைகளை சபை கொள்வனவு செய்துள்ளதாகவும் பனை அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. கடந்தகாலத்தில் குடாநாட்டில் பல ஆயிரக் கணக்கான பனைமரங்கள் அழிக்கப்பட்டுள்ளன எனவும், இந்த நிலையில் சபையானது பனை வளத்தை அதிகரிக்கும் நோக்கில் வடக்கில் நீண்டகாலத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தி அதனூடாக நடுகை செய்யப்படும் பனம் விதைகளை சிறந்த முறையில் பாதுகாத்துப் பராமரிக்கவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கில் கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் இந்த முறை கூடுதலான பனம் விதைகள் நடுகை செய்யப்படவுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது. 0000000000000000000000000000000000000000000000000000000 0000000000000000000000000000000000000000000000000000000 கனேடிய செய்திகள்: 1. கனடா பழமைவாதக் கட்சியின் முதலாவது பிலிப்பீனோ - கனேடிய செனட்டனர் ரொபாயஸ் என்விகா(Tobias Enverga) கொலம்பிய பயணத்தின் போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று காலையில் ஏனைய செனடடர்களுக்கு தெரிவிக்கப்பட்ட தகவலில், செனட்டர் ரொபாயஸ் என்விகா(Tobias Enverga) நேற்று இரவு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், உத்தியோகபூர்வமான அறிவிப்பு இன்னமும் வெளியிடப்படவில்லை. இந்த தகவலை வெளியியானதை தொடர்ந்து, நாடாளுமன்றில் பழமைவாதக் கட்சி உறுப்பினர்கள் மத்தியில், சமூக வலைத்தளங்கள் ஊடாக பெருமளவு அனுதாப கருத்துக்ள பரிமாறப்பட்டு வருகின்றன. அவர் மிகவும் சிறந்த மனிதர் எனவும், அவர் உயிரிழந்த தகவல் அறிந்து தாம் மிகவும் அதிர்ச்சியடைந்து, மனமுடைந்து போனதாகவும், கனேடிய பிலிபீனோ சமூகத்தினருக்கு அவர் மிகவும் சிறந்த ஒரு எடுத்துக் காட்டாக விளங்கினார் எனவும் பழமைவாதக் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். ரொபாயஸ் என்விகா(Tobias Enverga) கடந்த 2012ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் ஸ்டீஃபன் ஹாப்பரினால் ஒன்ராறியோவுக்கான செனடடராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 00000000000 2. Bayview Village பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற வீதி விபத்து ஒன்றில் உயிராபத்தான காயங்களுக்கு உள்ளான பாதசாரிகள் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Leslie Street மற்றும் Finch Avenue பகுதியில் இன்று முற்பகல் 11.30 அளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தினை அடுத்து குறித்த அந்த இருவரும் உள்ளூர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதிலும், அவர்களின் உடல்நிலை மோசமானதை அடுத்து அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டதாக கூற்பபடுகிறது. இந்த விபத்தின் போது ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் காயமடைந்ததாகவும், காயமடைந்த பெண் சுமார் 80 வயது மதிக்கத்தக்கவர் எனவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். விபத்துடன் தொடர்புடைய வாகனம் சம்பவ இடத்திலேயே தரித்திருந்ததாகவும், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 0000000000000000000000000000000000000000000000000000000 0000000000000000000000000000000000000000000000000000000 இந்திய செய்திகள்: 1. நளினிக்கு 6 மாதம் சிறைவிடுப்பு வழங்குவதற்கு மறுப்புத் தெரிவித்து தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சுமார் 26ஆண்டுகளாக சிறையில் இருந்துவரும் நளினி, தனது மகளின் திருமண வேலைகளுக்காக ஆறு மாதகால சிறைவிடுப்புக் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு குறித்து விசாரித்த நீதிபதி அனுமதி அளிப்பது குறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் இது தொடாபில் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றில் இன்று தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், நளினிக்கு 6 மாதம் சிறைவிடுப்பு வழங்குவதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு மாதங்கள் சிறைவிடுப்பு அளித்தால் நளினி, சட்டத்தின் பிடியிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பிசெல்ல அதிக வாய்ப்பு இருப்பதால் அவருக்கு சிறைவிடுப்ப வழங்க முடியாது என்று தமிழக அரசின் அந்த பதில் மனுவில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 00000000000 2. இந்திய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை "மைக்ரோசொப்ட" நிறுவனர் பில்கேட்ஸ் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இதன்போது பில்கேட்ஸ் செய்து வரும் நலப்பணிகள் தொடர்பில் கேட்டறிந்த இந்திய உள்துறை அமைச்சர், பில்கேட்ஸுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அதேவேளை இந்தியாவில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் ஈடுபடுமாறு அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்ட நிலையில், இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவைச் சென்றடைந்த நிலையில், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 00000000000 3. எளிதாக தொழில் தொடங்க கவர்ச்சிகரமான நாடாக இந்தியா வளர்ந்து வருகிறது என்று இந்திய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள நிதி அமைச்சர் அருண் ஜெட்லி், அங்கு நடைபெற்ற நிதி தொழில்நுட்ப விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு கூறியுள்ளார். எளிதாக தொழில் செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா ஒரே ஆண்டில் 30 இடங்கள் முன்னேறி 100-வது இடத்தை பிடித்துள்ளதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். நிதிச் சேவைகளில் "ஆதார்" இணைக்கப்பட்டு அனைத்து செயல்பாடுகளும் எண்ணிம மயமாகி வருகின்றமையால் மின்னணு பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார். பணமதிப்பு நீக்க நடவடிக்கை, பொருட்கள் சேவைகள் வரி நடைமுறை போன்ற சீர்திருத்த திட்டங்களால் குறுகிய கால சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் நடுத்தர மற்றும் நீண்டகால அளவில் இந்த நடவடிக்கைகளால் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய பயன்கள் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் இந்திய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மேலும் தெரிவித்துள்ளார். 0000000000000000000000000000000000000000000000000000000 0000000000000000000000000000000000000000000000000000000 பன்னாட்டுச் செய்திகள்: 1. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்று மதியம் ஜமியத்-இ-இஸ்லாமி கட்சி சார்பில் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த கூட்டைத்தைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. அதில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரப் கானியின் முன்னாள் அலோசகர் உட்பட அந்தக் கட்சியின் முக்கிய நபர்கள் கலந்துகொண்டிருந்தனர். இந்த நிலையில் பிற்பகல் 1.30 மணியளவில் கூட்டத்திற்குள் நுளைந்த தறகொலைப் படைத் தீவிரவாதி உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாக கூறப்படுகிறது. இதில் 9பேர் கொல்லப்பட்டதுடன், காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரையில் பொறுப்பேற்றகவில்லை. 00000000000 2. பாகிஸ்தானில் புலோடா என்கிற இடத்தில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் 15 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஈரான் நாட்டின் எல்லையையொட்டி உள்ள புலோடா என்கிற இடத்தில் வழக்கமான சுற்றுக் காவல்பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் அந்த சடலங்கைள்க கண்டெடுத்ததாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த இடத்தில் இருந்து சில ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் பாகிஸ்தானில் இருந்து ஈரானுக்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சித்து உள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை இவர்கள் 15 பேரும் மர்மநபர்களால் கடத்தப்பட்டதாக கடந்த செவ்வாய்கிழமை காவல்துறையில் வழக்கு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 00000000000 3. ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் தாம் கடுமையான பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், அமெரிக்காவுடன் நெருங்கிய ஒத்துழைப்பை உறுதிபடுத்த விரும்புவதாக யப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். அமெரிக்க பசுபிக் கட்டளை தளபதி அட்மிரல் ஹரி ஹரிஸுடனுடன், ரோக்கியோவில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வட கொரியாவின் ஏவுகணை மற்றும் அணுவாயுதச் சோதனையின் விளைவாக அந்தப் பிராந்தியத்தில் பெரும் பதற்றம் நிலவிவருகிறது என்றும் அவா கூறியுள்ளார். அமெரிக்காவும், யப்பானும் இணைந்த கடற்படை கூட்டுப் பயிற்சியை இன்று வியாழக்கிழமை தொடங்கியள்ள நிலையில் யப்பான் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 00000000000 4. சிம்பாவே நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் பேச்சுக்களை நடாத்த தென் ஆபிரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சிம்பாவேயில் இராணுவத்தினால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருக்கும் அந்த நாட்டு அதிபர் ரொபேர்ட் முகாபே மற்றும் இராணுவ தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக தென் ஆபிரிக்க அரசாங்கத்தின் அமைச்சர்கள் தலைநகர் ஹராரேவில் முகாமிட்டு இருப்பதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. சிம்பாவேவை 37 ஆண்டுகள் ஆட்சி செய்து, இப்போது வீட்டுச் சிறையில் இருக்கும் முகாபேவின் எதிர்காலம் குறித்து ஒரு உடன்பாட்டை எட்ட அவர்கள் முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதேவேளை முகாபே தனது பதவியிலிருந்து விலகுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. தென் ஆபிரிக்க வளர்ச்சி குழு மற்றும் ஆபிரிக்க ஒன்றியம், இராணுவ ஆட்சியை ஆதரிப்பதைவிட, அரசியல் அமைப்புச்சட்டத்தின்படி ஒரு தீர்வு காண வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. சிம்பாவே அதிபர் அதிபர் ரொபேர்ட் முகாபே கடந்த வாரம் அந்த நாட்டின் துணை அதிபர் எமர்சன் மனன்காக்வாவை பதவியில் இருந்து நீக்கியிருந்தார். ராபர்ட் முகாபே தனது மனைவியான 52 வயதான கிரேஸ் முகாபேயை அதிபராக்கும் முயற்சிக்காக அவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது. இந்தக் குழப்ப்ஙகளைத் தொடர்ந்தே அந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தை அந்த நாட்டு இராணுவம் நேற்றுப் புதன்கிழமை தனது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளதுடன்,அதிபர் ராபர்ட் முகாபேயையும் வீட்டுக் காவலில் தடுத்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.